ஜந்து ஜோடிகளின் உயிரோட்டமான காதல் கதை...
இருபத்தைந்து வருடம் கோமாவில் இருக்கும் விஷ்ணுபிரியாவுக்கு நினைவு திரும்புவது போன்றும் வெவ்வேறு ஊரில் வசிக்கும் நண்பர்கள் அவரை பார்க்க வருவது போன்றும் கதை துவங்கி 1980-க்கு பிளாஸ்பேக்கில் நகர்கிறது.
சஞ்சய் கிருஷ்ணா கல்லூரி மாணவர். இளையராஜா குழுவில் சேர்ந்து பாட வேண்டும் என்பது லட்சியம். ஆனால் தந்தை அரசு வேலைக்கு போக வேண்டும் என பிடிவாதம் செய்கிறார். அவர் ஆசைப்படியே அரசு வேலைக்கு போகிறார்.
அதே கல்லூரியில் படிக்கும் நிவாஸ் தவறுகளை தட்டிக் கேட்கும் அடிதடிக்காரர். அவருக்கும் உள்ளூர் எம்.எல்.ஏ. மகள் வைதேகிக்கும் மோதல் ஏற்பட்டு காதல் வயப்படுகின்றனர். திருமணம் செய்து நிவாஸ் கலெக்டராகவும் வைதேகி மந்திரியாகவும் ஆகின்றனர். இன்னொரு மாணவரான உதய்க்கு வீட்டில் வாடகைக்கு வசிக்கும் வயதில் மூத்த கஸ்தூரியுடன் காதல். ஒரு கட்டத்தில் கட்டி பிடித்து அத்துமீற கஸ்தூரி தூக்கில் தொங்கி சாகிறார். அவர் நினைவாகவே திருமணம் செய்யாமல் டாக்டராகி தனிமையில் வாழ்கிறார்.
போலீஸ்காரர் மகள் ஷிவானி மேல் முனிசுக்கு காதல். ஆனால் போலீஸ்காரரோ முனிசை தனது மகனாக தத்தெடுக்க காதல் முறிகிறது. முனிஸ் போலீஸ் அதிகாரியாகிறார். சலவை தொழில் செய்து படிக்கும் வினோத்துக்கு சகமாணவி விஷ்ணுபிரியா மீது காதல். ஆனால் விஷ்ணுப்பிரியாவை வில்லன் விரும்புகிறான். அவரை கடத்தி கட்டாய திருமணமும் செய்கிறான்.
வினோத் தாலியை அறுத்து எறிவதுடன் வில்லனை கொன்று விட்டு ஜெயிலுக்கு போகிறார். விஷ்ணுபிரியா தலையில் அடிப்பட்டு கோமாவுக்கு போகிறார். ஜெயிலில் இருக்கும் வினோத்தையும் நினைவு திரும்பிய விஷ்ணுப்பிரியாவை இருபத்தைந்து ஆண்டுக்கு பிறகு ஒன்று சேர்க்க நண்பர்கள் முயற்சிப்பது கிளைமாக்ஸ்...
ஐந்து காதலையும் ஜீவன் இழையோடு தொகுத்துள்ளார் இயக்குனர் செல்வா. கேரக்டர்களை 1980களில் வாழ்பவர்கள் போல் உருமாற்றியது நேர்த்தி. ஒவ்வொருவரும் பாத்திரத்தோடு வாழ்கின்றனர். கஸ்தூரி வயது குறைந்த இளைஞனின் பலாத்காரத்துக்கு உடன்படுவது சூடேற்றும் ரகம்.
வினோத், விஷ்ணு பிரியா காதலில் பழைய ஒருதலை ராகஜீவன். சலவை துணிகளை போடுவதுபோல் காதலியை பார்க்க செல்வது வில்லன் பிடியில் தவிக்கும் அவள் நிலை கண்டு உருகுவது என வினோத் மனதில் நிறைகிறார்.
வினோத் உயிருக்கு ஆபத்து நேரலாம் என பயந்து காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக் ம் விஷ்ணுபிரியா நடிப்பில் உச்சம் தொடுகிறார். தமிழ் திரையுலகுக்கு அழகும் நடிப்புமாய் வந்துள்ளார். கிளைமாக்சை இன்னும் வலுவாக்கி இருக்கலாம். சில சீன்களில் நாடகத்தனம் எட்டி பார்க்கிறது. பாலபாரதி இசையும், பாலமுருகன் ஒளிப்பதிவும் காட்சிகளோடு ஒன்ற வைக்கிறது.
Email This
BlogThis!
Share to Facebook