நீண்ட நாட்கள் கழித்து நடிகர் சித்தார்த் கதாநாயகனாக நடித்து உள்ளார். படத்திற்கு இணை தயாரிப்பாளாராகவும் உள்ளார். அமலாபால் கதாநாயகியாக நன்றாக நடித்து உள்ளார்.
தொடர்ந்து இதுபோல படங்களில் நடித்தால் நடிகை ரேவதி போல சிறந்த நடிகைக்கான இடம் கிடைக்கும் . செல் பேசி ,இணைய முகப்பு புத்தகம், நண்பர்கள் இவற்றின் காரணமாக இன்றைய காதலர்கள் சந்திக்கும் பிரச்சனையை நன்கு கையாண்டு உள்ளார் இயக்குனர் பாலாஜி மோகன்.
காதலில் சொதப்புவது எப்படிஆண்களா ? பெண்களா ? என்ற பட்டி மன்றம் பார்ப்பதுப் போன்ற உணர்வு வருகின்றது . நேசிப்பது வெறுப்பது இரண்டிலும் பெண்கள்தான் மிகவும் தீவிரமாக இருப்பார்கள். ஆண்களை நண்பர்கள் உசுபேத்தி காதலை சொதப்பி விடுகிறார்கள். இன்றைய இளைஞர்கள் பலர் குடிக்கு அடிமை ஆகிறார்கள். குடியை பெண்கள் யாருமே விரும்புவதில்லை. நண்பர்களின் வற்புறுத்தலின் காரணமாக குடித்ததன் காரணமாக காதலில் சொதப்பி காதலியை இழந்த கதை நிறைய உண்டு.
அதை இளைஞர்களுக்கு உணர்த்தும் விதமாக திரைப்படத்தில் காட்டி உள்ளார். புரிதல் இல்லாமல் சிறு சண்டைப் போட்டுப் பிரியும் காதலர்கள் பற்றிய கதை. காதலில் சொதப்புவது எப்படி?என்று, படத்தின் பெயர் எதிர்மறை சிந்தனையாக உள்ளதே என்று நான் யோசித்தேன். ஆனால் இந்தப் படம் பார்க்கும் காதலர்கள், சொதப்பாமல் காதலிப்பது எப்படி?என்பதை உணர்த்துகின்றது. தமனின் இசை நன்றாக உள்ளது.
அமலாபால் பெயர் பார்வதி, பார்வதியின் அம்மா அப்பா இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். விவாகரத்து வாங்க முயல்கின்றனர். அப்பா அம்மா பிரிவு பார்வதியின் மன நிலையை வருத்தப் படுத்துகின்றது. அந்த வருத்தம் அவள் காதலில் பிரதிப்பலிக்கின்றது. காதலனுடன் சண்டையிட நேருகின்றது. பார்வதியின் தாத்தா பாட்டிக்கு எண்பது திருமணம் வருகின்றது. பிரிந்து வாழும் தந்தையை பார்வதி திருமணத்திற்கு அழைக்கின்றாள். தந்தையாக நடிகர் சுரேஷ் நன்றாக நடித்து உள்ளார்.
மாமனாரின் எண்பது திருமணத்திற்கு வந்து பிரிந்த மனைவியை சந்திக்க பாசம் வந்து அன்பு வந்து விவாகரத்து எண்ணத்தை கைவிட்டு இணைகின்றனர். கருத்து வேறுபாடு வந்தால் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். பேசாமல் இருந்து பிரிவது தவறு. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்ற கருத்தை நன்கு உணர்த்தி உள்ளார்.
காதலில் மட்டுமல்ல குடும்பத்தில் சொதப்பாமல் இருபது எப்படி? என்பதையும் உணர்த்துகின்றது. படத்தில் ஆபாசம் நடனம், வன்முறை, வெட்டுக் குத்து, குத்துப் பாட்டு எதுவும் இல்லாமல் தரமாக மென்மையான காதலை மிக மேன்மையாக வடித்துள்ளார்.
தாத்தா பாட்டி தலைமுறை இறுதி மூச்சு வரை இணைந்து வாழ்கின்றது. அப்பா அம்மா தலைமுறை பிரிய முயலுகின்றது. பேரன் பேதி தலைமுறை உடனே பிரிந்து விடுகின்றது என்ற கருத்தை வலியுறுத்துகின்றார். காதல் கிடைப்பது அரிது கிடைத்த காதலை சொதப்பி இழந்து விடக் கூடாது. சிறு சிறு விசயங்களைப் பெரிதுப்படுத்தி காதலை இழந்து விடாதீர்கள்.
இப்படி பல்வேறு தகவல்களை படத்தில் வழங்கி உள்ள இயக்குனர் பாலாஜி மோகன் அவர்களுக்கு பாராட்டுக்கள். வழக்கமான தமிழ்த் திரைப்படப் பாணியில் இருந்து மாறுபட்டு வித்தியாசமாக சிந்தித்து, படத்தை நன்றாக வழங்கி உள்ளார்.


Paris Time

