முகம் தெரியாமலேயே இருவருக்கும் போனில் மோதல். சில மாதம் கழித்து சந்தர்ப்ப வசத்தால் இருவருக்கும் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை. அங்கு கார்த்திக்கிடம் இருந்து தோழிக்கு வந்த போனை மலர் தற்செயலாக எடுத்து பேச, கார்த்திக் குரலை கேட்டு மீண்டும் எரிந்து விழுகிறார்.
ஒருநாள் மலரை நேரில் பார்த்த கார்த்திக் அவளது அழகில் மயங்கி காதலிக்க துடிக்கிறார். ஆனால் பெயரை கேட்டாலே வெறுப்பாளே. யோசித்தான், சுந்தர் என பெயரை மாற்றி மலருக்கு காதல் வலை வீச அவளும் விழுந்தாள்.
பிரிய முடியாத அளவுக்கு காதல் வளர்கிறது. திருமண பேச்சு வரும்போது சுந்தருக்கு மனம் கூசுகிறது. தான் கார்த்திக் என உண்மையை போட்டு உடைக்க தோன்றுகிறது. ஆனால் உண்மையை சொன்னால் காதல் முறிந்துவிடுமே என பயந்து திருமணத்துக்கு தயக்கம் காட்டுகிறான்.
கடைசியில் சஸ்பென்ஸ் முடிச்சை அழகாக அவிழ்த்து இருக்கிறார் டைரக்டர் ஆன்ட்ரூ லூயிஸ். அனுபவசாலி போல் குழப்பம் இல்லாமல் கதையை அலுப்பு தட்டாமல் நகர்த்தி செல்கிறார்.
ஆனால் கார்த்திக் ஒவ்வொரு முறையும் போன் செய்து மலருக்கு அட்வைஸ் சொல்லும் போது அவன் மீது சந்தேகம் வராதது ஏனோ? யதார்த்தமாக காதல் கதையை சொல்லியிருப்பது சபாஷ்.
காத்திர்க் + சுந்தராக மும்பை கதாநாயகன் ஷிவ். வாட்டசாட்டமான உடம்பு நம்மூர் இளசுகளுக்கு பிடிக்கும். மலரை வெறுப்பதும், அவள் காதலுக்கு ஏங்குவதும் நல்ல நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
அறிமுக நாயகி மான்சி துருதுருவென்று இருக்கிறார். அதிகம் மேக்கப் இல்லாமல் நாம் பார்க்கும் மாணவியாக இளம் என்ஜினீயராக கண்முன் நிற்கிறார். இறுதி காட்சியில் ஆனந்த கண்ணீர் விட்டு அழும் காட்சியில் பெண்மையை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
வேல்ராஜின் ஒளிப்பதிவில் பவுர்ணமி நிலா, நட்சத்திரங்கள், கடல் அலையின் பின்னணியில் அற்புதம். சதீஷ் சக்ரவர்த்தி இசையில் பாடல்கள் மெலடியாக ஒலிக்கிறது.
ஆபாசம் இல்லாத லீலை. கல்லூரி இளசுகளை கவரும்.